திமுக, மாநில சுயாட்சி கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கிறது: திருச்சி சிவா!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அமித்ஷா தாக்கல் செய்த மறுவரையறை மசோதா மீது திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா எம்பி பேசினார். அப்போது, நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதை விட அவரது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் மிக முக்கியமானது என 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான குரலை பதிவு செய்தார் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா.

இந்த விவாதத்தின் போது திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்றார். இதற்கு சபையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, திருச்சி சிவா திமுகவின் பிரதிநிதியாக பேசுகிறாரா? அல்லது ஒட்டுமொத்த “இண்டி” கூட்டணிக்காக பேசுகிறாரா? என கிண்டலடித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார் என்றார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. சபைத் தலைவரான துணை ஜனாதிபதியும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனாலும் திருச்சி சிவா, சீனா யுத்தத்தின் போது திராவிட நாடு தனி நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது. வங்கதேச யுத்தத்தின் போது தமிழ்நாடுதான் பெரும் நிதி கொடுத்தது. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும் திமுக, மாநில சுயாட்சி கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்ததை எதிர்க்கவே செய்கிறோம் என்றார். இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.