சட்டப்பிரிவு 370 வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடு இல்லை: ப. சிதம்பரம்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தில் உடன்படாடு இல்லை என்றும், சிறப்புச் சட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை அது “கவுரத்துக்கு தகுதியானது” என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ப. சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:-

பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் குறித்த தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்கவில்லை. இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை 370-வது பிரிவு மதிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது, அவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றியது விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மக்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அவர்களை காக்க வைக்கக் கூடாது. விரைவாக தேர்தல் நடத்தப்படும்போதுதான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு கேள்விகள் மீது மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க வாய்ப்பு ஏற்படும். ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டதில் இருந்து அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய குடிமக்கள். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதி, வளர்ச்சி மேம்பட நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தலே நடத்தப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 10 ஆண்டுகளாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது? என்று அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பின் இறுதியுரையை வாசித்தார். அப்போது அவர், “காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துவிட்டனர். அங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.