இவங்க ஆட்சியில் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள்: பொன். ராதாகிருஷ்ணன்

“நம்ம குழந்தையை இப்படி அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்தால் நாம் சும்மா இருப்போமோ? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற அரசாங்கத்தின் அகந்தை தானே இப்படியொரு செயலுக்கு காரணம்” என்று பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி சவுமியா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். இதனிடையே, இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால் மருத்துவமனைக்கு சவுமியாவை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தொப்புள் கொடி அறுபடவில்லை. இதனைத் தொடர்ந்து, தனது மனைவியையும், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தையையும் மீன் வண்டியில் வைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், பிணவறைக்கு அதன் உடலை அனுப்பினர்.

இந்த சூழலில், குழந்தையின் உடலை முறையாக துணியை வைத்து மூடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் ஏதோ பொருளை வைத்து கொடுப்பதை போல, குழந்தையின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்களை அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு பச்சை குழந்தையோட உடலை அட்டை பெட்டியில் வெச்சு கொடுத்துருக்காங்க. கேட்டால், அதிகாரிகள் மீது ஆக்சன் எடுத்துட்டாங்களாம். சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்களாம். அந்த உயிருக்கு யாருங்க பதில் சொல்லுவா? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. ஆனால் கரண்ட் இல்லைனு சொல்லி அவங்கள அட்மிட் பண்ணல. இவங்க ஃபியூஸை பிடுங்கணுமா வேண்டாமா? இவங்க ஆட்சியில் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள்.

ஏதோ மருந்து வந்த அட்டைப் பெட்டியில் வைத்து குழந்தையின் சடலத்தை அனுப்பி இருக்காங்க. இதுதான் முறையா? இதே ஒரு பணக்காரரின் குழந்தை இறந்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா? நம்ம பிள்ளையை இப்படி அட்டை பெட்டியில் வெச்சு கொடுத்தால் நாம சும்மா விட்ருவோமா? தங்கப்பெட்டியில் வெச்சா கொடுக்க சொல்றோம். ஒரு துணியில மடிச்சு வெச்சு மரியாதையா கொடுக்க தெரியாதா? இதுக்கு என்ன அர்த்தம்.. நாம என்ன வேணாலும் செய்யலாம்.. நம்மள யாராலும் ஒன்னும் செய்ய முடியாதுங்குற அகந்தையில் இருக்கக்கூடிய அரசாங்கம் செய்கிற செயலாக தான் இதை பார்க்க வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.