பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடியில் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை: போலீசார்

பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளார்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிரணவ் ஜூவல்லர்ஸ். இந்த நகைக்கடையின் விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். மேலும், பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜூவல்லர்ஸ். இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜூவல்லர்ஸ் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர். பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது. நிறைய பேர் நகை எடுக்க கூடினர். பழைய நகைகளை கொடுத்து டெபாசிட் செய்தனர். குறிப்பாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12ஆம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்தனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜூவல்லர்ஸ் அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தினர். பிரணவ் ஜூவல்லர்ஸ் நிர்வாகத்தினர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறையினர் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் அந்த கடைக்கு தொடர்புடைய சுமார் 11 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்ததும், அவருக்கும் இந்த நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மோசடியில் தொடர்பு இல்லை என தெரியவந்திருப்பதால் பிரகாஷ்ராஜிடம் விசாரணை நடத்தப் போவதில்லை எனவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரணவ் ஜூவல்லரி விளம்பரத்தில் மட்டுமே பிரகாஷ் ராஜ் நடித்தார் என்றும், அவருக்கும் இந்த நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறியுள்ளார். அதே நேரத்தில் 100 கோடி பிரணவ் ஜூவல்லர்ஸ் பொன்சி திட்ட முறைகேடு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.