தயவு செய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமுடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். அதற்கு முன்னதாகவே இவர், ஆல வைகுண்டபுரமுலோ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள புட்டபொம்மா என்ற பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இந்த ஒரு பாடல் அவரை பாலிவுட், கோலிவுட், தோலிவுட் என எல்லா வுட்டில் கொண்டு சேர்த்தது. ஆனால் இந்தப் படத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால், பூஜா ஹெக்டேவின் திரையுலக வாழ்க்கை மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் கரம் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே நீக்கப்பட்டார். தற்போது தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லாத பூஜா ஹெக்டே இந்தியில் ஷாஹித் கபூரின் தேவா படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பூஜா ஹெக்டே துபாய் சென்று உள்ளார். அங்கு அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து இருக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு பூஜா ஹெக்டே குழு சமீபத்தில் பதிலளித்து உள்ளது.

“இதுபோன்ற போலிச் செய்திகள் ஏன் உருவாக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இந்த செய்தியில் உண்மை இல்லை. தயவு செய்து இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்” என்றனர்.

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய செய்தியையும் நீக்கப்பட்டு வருகிறது. உண்மை தெரிந்ததும் பூஜாவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.