பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கர்நாடக காங்கிரஸ் அனுமதிக்கிறது: நிர்மலா சீதாராமன்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்துநிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நியாயம் இல்லை. சமீபத்தில் பெலாகவியில் நடந்த சம்பவம், காங்கிரஸ் ஆண்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பட்டியல் இனமக்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுடன் சேர்ந்தவையே. காங்கிரஸ் கட்சிக்கு பட்டியில் இன மக்கள் வெறும் வாக்கு வங்கிகள் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தனது பதிவில் பெலாகவி சம்பவம் குறித்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் அவதானிப்பு குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவில், “கர்நாடகாவின் பெலாகவி மாவட்டத்தில் 2023, டிச.10-11 இடைபட்ட இரவில் 42 வயது பெண் ஒருவரின் மகன் வேறு பெண் ஒருவரை காதலித்து அவளுடன் ஊரைவிட்டுச் சென்றதால், அந்தத் தாயை நிர்வாணப்படுத்தி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், கர்நாடகா மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளில் திருப்தி அடையாத உயர் நீதிமன்றம், இச்சம்பவத்தை தடுக்க தவறிய மாநில அரசினை கண்டித்தும், அப்பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழக்கப்பட்டதா என்றும் ஏன் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்று கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, இது வெட்கக்கேடான சம்பவம் என்றும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீரான இடைவெளியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றும் விமர்சித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.