நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளார்!

‘தங்கலான்’ படம் அடுத்த மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளார்.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். இந்த படம் அடுத்த மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இறுதிக்கட்ட டப்பிங் பணிகளில் இருப்பதாகவும், படத்தின் டீசரில் தனக்கு வசனம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.