இப்போ நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்.. ஊர் சுத்திட்டு இருக்கேனா: உதயநிதி ஸ்டாலின்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

வரலாறு காணாத அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடியை மழை வெள்ளம் கூறுபோட்டு சென்றிருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக அந்த மாவட்டங்கள் காட்சி அளிக்கின்றன. உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, மழை நீர் வடிந்த நிலையில் அந்த மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நெல்லையில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கொண்டிருந்த உதயநிதியிடம் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு பல கேள்விகளை எழுப்பினர். அப்போது நிருபர் ஒருவர், “வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மீட்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே” என கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்வியால் கோபமடைந்த உதயநிதி, “இப்போ நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்.. ஊர் சுத்திட்டு இருக்கேனா.. மீட்புப் பணியில் தானே ஈடுபட்டுட்டு இருக்கேன். அப்புறம்.. அவங்க வேலை இல்லாம ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. வரலாறு காணாத மழை பெஞ்சுருக்கு. பெரிய அளவில பாதிப்புகள் நடந்துருக்கு. அமைச்சர்கள் எல்லோருமே களத்துல இறங்கி வேலை பாத்துட்டு இருக்கோம்” எனக் கூறினார்.