தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருச்சி சிவா!

“குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் இந்த அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது. தமிழக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியாற்றுகிறது. நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்கிறது. ஆனால், மத்திய அரசு தமிழக அரசிடமிருந்து வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கிறது.

ஒரு மாநில அரசு இடர்பாடுகளில் இருக்கும்போது, உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் கோட்பாடு. ஆனால், மத்திய அரசு தங்களுடை எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களை எல்லாம் வஞ்சிக்கிறது. இதுபோல் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளலாம். ஆனால், மக்கள் வாடி நிற்கும்போது, தேவைகளால் தடுமாறுகிற போதும், ஒரு அரசு முனைப்பாக செயல்படும்போது, உதவி செய்யவும், உறுதுணையாகவும் இல்லாமல் மத்திய அரசு அரசியல் செய்கிறது. பாரபட்சமாக நடந்துகொள்கிறது.

மத்திய அரசு இவ்வளவு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது, தமிழக அரசு கோரிய நிதியில் இருந்து ஒருபகுதியைக்கூட கொடுக்காமல், தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து நியாயமாக கொடுக்கக்கூடிய பங்கு ரூ.492 கோடி கொடுத்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் குஜராத்தில் ஏதாவது பாதிப்பு என்றார், ஆயிரம் கோடி கொடுக்கிறார்கள். மத்திய அரசு இதுபோன்ற ஓரவஞ்சனையான செயல்களை செய்து வருகிறது.

வெள்ளத்தின்போது தமிழக அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. வெள்ள பாதிப்பு நிலவரங்களை பார்வையிட வந்து ஆய்வு செய்து திரும்பிய மத்தியக் குழு, கடமைகளையும் பணிகளையும் இவ்வளவு சிறப்பாக யாரும் செய்தது இல்லை. தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டிவிட்டு சென்றனர். ஆனால், அமைச்சர் ஒருவர் தன்னுடைய பொறுப்பை மறந்து நாடாளுமன்றத்தில் ஓர் ஆதரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இது அரசியல்தனமாக குற்றச்சாட்டு. இதற்கு மறுப்பு தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை மத்திய அரசு இதுவரையில் தரவில்லை. எனவே, அமைச்சர் பேசியது ஆதாரமற்றது. அதை நிரூபிக்க வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.