கீர்த்தி பாண்டியனுக்கு ஆர்டர் போட நான் ஓனர் கிடையாது: அசோக் செல்வன்!

அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிப்பது குறித்து அசோக் செல்வன் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவரான அசோக் செல்வன், பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தற்போது நடைபெற்று வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கூட போர் தொழில் திரையிடப்பட்டது. அசோக் செல்வன் கேரியரில் சூப்பர் கம்பேக் கொடுத்த படமாக போர் தொழில் அமைந்தது.

இந்நிலையில், அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் அசோக் செல்வனுக்கு சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சில வாரங்களுக்கு முன்னர் தான் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற்றது. நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அசோக் செல்வன். இவர்களது திருமணம் செம்ம கலர்ஃபுல்லாக நடந்து முடிந்தது. இதனையடுத்து அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் தம்பதியினருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அதேநேரம் கடந்த வாரம் ரிலீஸாகவிருந்த அசோக் செல்வனின் சபா நாயகன் இன்று வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நேற்று சபா நாயகன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அசோக் செல்வன் பதில் கூறினார். அதில், திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என ஓபனாக பேசியிருந்தார்.

முன்னதாக கண்ணகி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடமும் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதில் கூறியிருந்த கீர்த்தி பாண்டியன், நடிப்பும் ஒரு தொழில் தானே, இத மட்டும் கல்யாணம் ஆகிட்டா செய்யக் கூடாதா.. திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சினை. இதே கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா. ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம், ஆனால், நடிகைகளுக்கு மட்டும் என்ன பிரச்சினை என காட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.