துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இந்தியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 19 குழந்தைகள் உள்பட 21 பேரை ஒரு இளைஞர் சுட்டுக்கொன்றார். இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு குழந்தைகள் 19 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டிக்க வார்த்தைகளே இலலை. அக்குழந்தைகளின் குடும்பத்தினருடன் மொத்த உலகமும் துயரத்தில் இருக்கிறது. வெறுப்பு பேச்சுகளும், வெறுப்பு கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த நாம் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். துப்பாக்கி தொடர்பான அமெரிக்க சட்டங்கள் மென்மையானதாக உள்ளன. இந்தியாவும் இத்தகைய சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும். துப்பாக்கியை யார் வாங்கலாம், யார் வைத்திருக்கலாம் என்பது தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.