இந்தியா திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கே சொந்தம்: ஒவைசி

இந்தியா ஒருவருக்கு சொந்தமெனில் அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கே என ஒவைசி பேசியுள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மராட்டியத்தின் பிவண்டி நகரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி மற்றும் அமித்ஷாக்களுக்கோ கிடையாது. இந்தியா ஒருவருக்கு சொந்தமெனில் அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கே ஆகும். ஆனால், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எல்லாம் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவர்களே. ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து மக்கள் புலம்பெயர்ந்து வந்தபின்னரே இந்தியா உருவானது.

பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகியவை மதசார்புடைய கட்சிகள். அவர்கள், தாங்கள் சிறைக்கு போக கூடாது என நினைக்கின்றனர். ஆனால், முஸ்லிம் கட்சி உறுப்பினர் ஒருவர் போனால் அவர்களுக்கு சம்மதம். சஞ்சய் ராவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்த பிரதமர் மோடியை சென்று சரத் பவார் சந்திக்கிறார். ஆனால், நவாப் மாலிக்கிற்கு இதனை ஏன் பவார் செய்யவில்லை என தேசியவாத காங்கிரசின் தொண்டர்களிடம் கேட்க விரும்புகிறேன். சஞ்சயை விட நவாப் குறைந்தவரா? நவாப் மாலிக்கிற்காக ஏன் நீங்கள் பேசவில்லை என சரத் பவாரை கேட்க நான் விரும்புகிறேன்? ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம்? சஞ்சய் மற்றும் நவாப் சமமில்லையா?. இவ்வாறு அவர் பேசினார்.