ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக்கோரி மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சாந்தன் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உத்தரவிடக்கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.