வெற்றியை குறிப்பிட 15 ஆண்டுகளாகிவிட்டது: சாந்தனு!

“வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிட எனக்கு இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” என நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ்ஜின் மகனான சாந்தனு 2008இல் சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். சித்து +2, அம்மாவின் கைப்பேசி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் கவனம் பெற்றாலும் பெரிய வெற்றிக்கான காத்திருப்பு தொடர்ந்தது. விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதால் அவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்காமலே இருந்தது. இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படம் சாந்தனுக்கு நல்ல நடிகர் என்ற பெயருடன் மிகப் பெரிய வெற்றியையும் கொடுத்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் நேற்று (ஜன. 25) வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில், “இது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றி என்ற வார்த்தை குறிப்பிட எனக்கு 15 வருடங்கள் 4 மாதங்கள் அதாவது 5,600 நாள்கள் ஆகியுள்ளன. இது எல்லாம் உங்களால் மக்களே. உங்களது தொடர்ச்சியான ஆதரவும் அன்பும் மட்டுமே என்னை இத்தனை வருடங்களாக இயக்கி வருகிறது. எபோதும் இதற்கு நன்றியுடன் இருக்கிறேன். ப்ளூ ஸ்டார் சிறப்பான படம். நீங்கள் இதை சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள். நன்றி. வெற்றி நடை போடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.