நேபாள விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழப்பு?

நேபாள நாட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான பொக்காராவில் இருந்து 22 பேருடன் டாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள், ஜப்பானியர்கள், விமானிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் போன் சிக்னல் உள்ளிட்டவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா? விமானத்தின் நிலை என்ன? என்பது குறித்து மலைப்பகுதியில் நேபாள ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதீந்திரா மணி பொக்ரெல் கூறுகையில், “விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கிறோம். இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என முதற்ககட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.