பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

நாட்டில் குழந்தைகளை நான் பிரதமராக பார்ப்பதில்லை, அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் தற்போது பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார் .

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது. கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 18 முதல் 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார். பா.ஜ., ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் இன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ் என்ற குழந்தைகள் காப்பதற்கென ஒரு புதிய திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-

நாடு தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. உலகளவில் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. கோவிட் பாதிப்பின் போது நாம் மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பினோம். இதில் நல்ல பலன் கிடைத்தது. இது போல் இளைஞர்கள் மீதான நம்பிக்கையும் நல்ல பலனை தரும். சப்கா சாத்- சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்- சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்தால் நாடு முன்னேறுகிறது.

கொரோனாவின்போது இந்தியா பிரச்சனையாக இருக்கவில்லை. தீர்வை கொடுக்கும் நாடாக இருந்தது. நாம் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வந்தோம். தடுப்பூசிகளை உலகில் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

இன்றைய குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பலன் பெறுவர். குறிப்பாக கோவிட்டால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கும். ஏற்கனவே ஆயூஸ்மான் ஹெ ல்த் கார்டு மூலம் குழந்தைகள் சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. பிரதமர் நிதியின் மூலம் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிரதமர் கேர் திட்டத்தின் கீழ் இன்றைய விழாவில் நான் குழந்தைகள் மத்தியில் ஒரு பிரதமராக பேசவில்லை. அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் பார்க்கிறேன். குழந்தைகள் மத்தியில் இன்று மிக மகிழ்வாக உள்ளேன். இவ்வாறு மோடி பேசினார்.