‘புஷ்பா 2’ ஜப்பானிலும் வெளியிட பேசி வருகிறார்கள்: ராஷ்மிகா!

‘புஷ்பா 2’ படத்தை ஜப்பானிலும் வெளியிட பேசி வருகிறார்கள் என்று ராஷ்மிகா கூறினார்.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு அளித்த பேட்டியில் ‘புஷ்பா 2’ பற்றி கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘புஷ்பா 2’ மிகப்பெரிய படமாக இருக்கும். பாதி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. நான் இந்தியா திரும்பியதும் அடுத்த பாடல் காட்சியை படமாக்குவோம். இதில் என் கேரக்டரான வள்ளி, ‘புஷ்பா’வுக்கு மனைவியாகிவிட்டதால் இன்னும் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. இதில் அதிகமான டிராமாவும் மோதல்களும் இருக்கின்றன. ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் அதிக மசாலா விஷயங்களும் இருக்கின்றன. இந்தியாவில் இந்தப்படம் வெளியாகும் அதே நாளில் ஜப்பானிலும் வெளியிட பேசி வருகிறார்கள் என்றார்.