குட்கா வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்ய சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ காவல்துறை தரப்பில் “குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கபட்டது. அப்போது நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறிவருவதாக அதிருப்தி தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜாரகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21 தேதிக்கு தள்ளிவைத்தார்.