தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி: டி.ஆர். பாலு

தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்க தொடங்கிவிட்டன. இருந்தபோதிலும், இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்த தேர்தல் களமும், இப்போது இருக்கும் தேர்தல் களமும் மாறுதலை சந்தித்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலமாக திமுக vs அதிமுக என்றே இருந்து வந்த தமிழக அரசியல் களம், தற்போது திமுக vs பாஜக என்பது போல மாறியுள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், கடந்த 2 ஆண்டுகளாகவே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையுமே விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்திற்கு வந்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு அங்கு கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது

மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மோடி என்ன கூறினார்? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? நான் ஆட்சிக்கு வந்தால் 35 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பதாக சொன்னார். இப்போ 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் 400 ரூபாய் இருந்தது. இப்போது 1000 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. இப்படி விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமாக தான் மோடி அரசாங்கம் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக மோடி சொன்னாரே.. 10 வருஷம் முடியப்போகுது.. கொடுத்தாரா? வருஷத்துக்கு 2 கோடி பேர் வேலைவாய்ப்பு தர்றேனு சொன்னாரு. அப்படி என்றால் இப்போது 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைச்சிருக்கணும். தந்தாரா? கிடையாது. இதுதான் வாயில் வடை சுடுவது என சொல்வது. அதை தான் பாஜகவினரும் பண்ணிட்டு இருக்காங்க. இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.