அறுவை சிகிச்சை முடிந்தது வீடு திரும்பினார் அஜித்குமார்!

அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியிருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்லிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துமுடிந்தது. அதனையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது. அநேகமாக அஜர்பைஜானில்தான் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே இடையில் கிடைத்த பிரேக்கில் சென்னையில் இருந்தார் அஜித்.

சூழல் இப்படி இருக்க அவர் முழு உடல் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டதாகவும்; அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இதனையடுத்து அவருக்கான அறுவை சிகிச்சையை மொத்தம் மூன்று மருத்துவர்கள் செய்தார்கள். மைல்டான ஆபரேஷன் என்று கூறப்பட்டது. இருந்தாலும் அஜித் தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ; தகவலோ வெளியிடப்படவில்லை. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மேற்கொண்டு குழப்பமடைந்தனர். மேலும் அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற கேள்வியும் ஏகே ரசிகர்களிடையே எழுந்திருந்தது.

இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து அஜித் வீடு திரும்பியிருக்கிறார். இதுகுறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கும் தகவலில், “மருத்துவ சிகிச்சை முடிந்து அஜித்குமார் வீடு திரும்பியிருக்கிறார். காதுக்கு அருகே இருக்கும் வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அவர் இன்று அதிகாலை வீடு திரும்பியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அஜித்குமார் நலமுடன் வீடு திரும்பிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவரால் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அநேகமாக அஜித்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இன்னும் சில வாரங்கள் ஷூட்டிங் தள்ளிப்போகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.