சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மாவுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா. இவை அனைத்தையும் மறைத்து விட்டு, ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் மற்றொரு பதிவில் கூறியுள்ளதாவது:-

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பண மோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.