இளையராஜா பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருதையும் பெற வேண்டும்: அன்புமணி

இன்று 80 வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர் நூற்றாண்டு கண்டு பாரத ரத்னா விருது பெற வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது 80 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ட்விட்டரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-

முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச் சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்! இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்! மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்!

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.