தேர்தல் நடத்தை விதி மீறியதாக ஓ பன்னீர் செல்வம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அவரது அணி உள்ளது. பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதி ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அனுமதியின்றி வாகனங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளார். 8 வாகனங்களில் பிரசாரம் செய்த ஓ பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முகமது யாசர் திருப்புல்லாணி போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் ஓ பன்னீர் செல்வம் மீது தேர்தல் நடத்தை விதிமீறியதாக புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.