நடிகர் பிரசாந்த் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்!

1990 காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். சில ஆண்டுகளாக சினிமாவில் காணாமல் போன இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், அரும்பு மீசை இளைஞனாக 1990ம் ஆண்டு இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தனது சினிமாவில் அடியெடுத்து வைத்தார் பிரசாந்த். இப்படத்தில் காவேரி, சுலக்சனா, சங்கீதா, கே. பிரபாகரன், ஜனகராஜ், சார்லி, கே.ஆர். விஜயா, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, கொச்சின் ஹனிபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் தேவா இசையமைத்திருந்த நிலையில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. படம் வெளியான போது, ரேடியோ, கோவில் திருவிழா என எந்த பக்கம் திரும்பினாலும் இந்த பாட்டு தான் ஒலித்துக்கொண்டு இருந்தன. இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வணிக ரீதியாக வசூலை அள்ளியது.

சினிமா கெரியரில் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ணபூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் திரைப்படம் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானதாக அமைந்தது. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். உலக அழகி ஒரு பக்கம் உலக அதிசயங்கள் மறுபக்கம் என இந்த படத்தில் இடம் பெற்ற பூவிற்குள் ஒளிந்திருக்கும் அதியம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

ஜீன்ஸ் படத்திற்கு பிறகு யாருமே தொடமுடியாத உயரத்திற்கு சென்ற பிரசாந்த், 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அடிக்கடி கோர்ட், கேஸ் என அலைந்துக் கொண்டிருந்த பிரசாந்த்தால் சினிமா மீது கவனம் செலுத்த முடியாமல் போனதை அடுத்து அப்போது வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இதையடுத்து, இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். ஆனால், அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. தற்போது அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அந்தாதூண் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் படம். படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் படம் இன்னும் வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.