சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு!

மதுரை மாவட்டம் வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியிருப்பதாவது:-

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பாரம்பரிய முறைபடி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க நாளை முதல் அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி உயர் அழுத்த மோட்டார்கள், மின் மோட்டார்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது. இவ்வாறு மதுரை ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்தள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசைத் திறன் கொண்ட பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதி பொருள்களை கலந்து பீய்ச்சி அடிக்கிறார்கள். இதனால் கள்ளழகர், தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் திரவியம், வேதிப் பொருட்கள் கலந்த தண்ணீரால் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள், பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பாரம்பரியமான நடைமுறையான தண்ணீரை பீய்ச்சி அடிப்பது நடந்து வருகிறது. ஆனால் இது பெண்கள், குழந்தைகளை ஒரு சில இளைஞர்கள் வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகிறார்கள். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனவே இனி பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் முன் அனுமதி பெற்றுக் கொண்டு அனுமதிக்கப்பட வேண்டும். கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவு இனி வரும் காலங்களிலும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.