எனக்கு இதுவரை ஐந்து முறை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது: நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி, தன்னுடைய திருமணம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனக்கு இதுவரை ஐந்து முறை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாக கூறினார். தான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஆனால் அது தற்போது நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்து அதிரடி காட்டினார். முதல் படத்திலேயே இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள். தொடர்ந்து மங்காத்தா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை அஞ்சலி தெலுங்கில் கீதாஞ்சலி மல்லி வச்சுந்தி என்ற படத்தில் நடித்துள்ளார். இது அஞ்சலியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை அஞ்சலி, தன்னுடைய ஐம்பதாவது படம் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அந்த ஆசையை கீதாஞ்சலி மல்லி வச்சுந்தி படம் தீர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஒவ்வொரு படியாக 50வது படம் வரை தூக்கிவிட்ட ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். கீதாஞ்சலி மல்லி வச்சுந்தி படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலியிடம் அவர் திருமணம் ஆன தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அஞ்சலி, தனக்கு திருமணம் என்று வெளியாகும் செய்திகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிப்படுத்தினார். இதுவரை தனக்கு நான்கு முறை இதுபோன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தனக்கு ஐந்தாவது திருமணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்றும், ஆனால் அது தற்போது இல்லை என்றும் கூறிய அஞ்சலி, தான் லிவ் -இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் வதந்திகள் வந்ததை தான் கேள்விப்பட்டதாகவும் தான் தன்னுடைய வீட்டிலேயே வசிக்காமல் வெளியில் வசிப்பதாகவும் தன் வீட்டில் தங்கி இருப்பவர் வாடகை கொடுத்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். தான் இஎம்ஐ செலுத்தி வருவதாகவும், அதனால் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் தன்னுடைய திருமணம் குறித்து வரும் வதந்திகள் பொய்யானவை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.