6 மாதங்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என, பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவது கால தாமதம் செய்யப்படுதாகக் கூறப்படுகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், பட்டப்படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக, யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு, நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பல்கலைக் கழகங்கள், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தொடர்புடைய பல்கலைக் கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக் கழகங்கள் தாமதம் செய்வதாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பட்டங்களை பெறுவதில் ஏற்படக் கூடிய தாமதம் காரணமாக மாணவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, 6 மாதங்களுக்குள் பட்டங்களை வழங்குவதற்கு அனைத்து பல்கலைக் கழகங்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.