இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம்: ராகுல் காந்தி

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம். அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும், அதை காப்பாற்ற அதன் நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை அரசியல் அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

அரசியலமைப்புச் சட்டம் செயலிழந்தால், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் பதவிக்காக ஆசைப்படும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அதிகாரத்தை அடைவதைப் பற்றியே சிந்திக்கிறார்கள். நான் அதிகார மையத்தில் பிறந்ததால் அதை அடைவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தியதற்காக கன்ஷிராம் மீது எமக்கு மரியாதை இருக்கிறது. உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க கோரிக்கை விடுத்தோம். அவரே முதலமைச்சராக இருக்குமாறும் தெரிவித்தோம். ஆனால் அவர் எங்களுடன் பேசவே இல்லை. ஆளும் பாஜக கட்சிக்கு மாயாவதி தெளிவான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளார். மாயாவதி முடிவால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டது. இவ்வாறு ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.