ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி: அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை!

பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தி மொழியை ஆங்கிலத்துக்கு மாற்றாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில தினங்களுக்கு முன் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:

பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பலதரப்பட்ட தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பிற மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை தராமல், இந்தியெனும் ஒற்றை மொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகார போக்கு கடும் கண்டனத்துக்குரியது.

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்து ‘இந்து’, ‘இந்தி’, ‘இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் நாட்டின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும். பாஜக அரசின் இந்தித் திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழகமும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர் புரிவோம்.

பாகிஸ்தான் செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.