298 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் 40% பேர் இருப்பது மோடிக்கு வெட்கமாக இல்லையா?: மனோ தங்கராஜ்!

ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் 40% பேர் இருக்கிறார்கள் என்றும், இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா என்றும் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக சாடியுள்ளார்.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், 4 கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து, 5 வது கட்டமாக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் களம் அனல்பறந்து கொண்டிருக்க அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். இதற்கு பதிலடியாக இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவை சேர்ந்த அமைச்சரான மனோ தங்கராஜ், மத்திய அரசை கடுமையாக தேர்தல் தொடங்கியதில் இருந்தே சாடி வருகிறார். குறிப்பாக மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை புள்ளி விவரங்களுடன் தாக்கி பேசி வருகிறார். அந்த கையில், “இந்தியாவில் 40% க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள். இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா? என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இன்று மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்தியாவில் 40% க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள். ஆனால் கோடீஸ்வரர்களின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வெட்கம் இல்லையா? மோடிஅரசு கார்ப்பரேட் வரியை 2019 – ல் 30% லிருந்து 22% ஆக குறைத்தது, இது இரண்டு ஆண்டுகளில் அரசிற்கு 1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. இந்தத் தொகை 2020-21 ஆம் ஆண்டில் MGNREGA மற்றும் NFSA ஆகிய இரண்டு திட்டங்களுக்கான பட்ஜெட்டுகளை விட அதிகமானது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தில் உள்ளது, இது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இருந்த அளவை விட அதிகம். 0.001% மேல் தட்டு மக்கள் (10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள்) 50% கீழ் தட்டு மக்களை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்துள்ளனர்.இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் எனபதற்காக தான் சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.