நெல்லையில் தொடர் மழையால் நெற்பயிர் சேதம்: நிவாரணம் வழங்க சபாநாயகர் அப்பாவு கடிதம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சபாநாயகர் மு.அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏராளமான விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கும்பிகுளம், கருங்குளத்தில் பெய்த கனமழை காரணமாக சேதமான நெற்பயிர்களை ஆய்வு செய்தார். பின்னர் இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்ட கால பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக நெல் மணிகள் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால் நெற்பயிர்களை வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகில் உள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம், பாசனப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அதேபோல், ராதாபுரம் தாலுகா கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழையால், நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல் மணிகளி்ன் சேதத்தை ஆய்வு செய்து, இதனை பேரிடராகக் கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழமையான நிவாரணம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.