தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இடம்பெறவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி. பேசினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்றைய மாநாட்டின் நிறைவு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

தமிழகத்தில் பி.ஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது.

தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில் இடம்பெறவில்லை. வேலுநாச்சியார், கட்டபொம்மன் ஆகியோர் பெயர்கள் சமூக-அறிவியல், வரலாறு பாட புத்தகத்தில் உள்ளன. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்தனர். சுதந்திர போராட்ட இருட்டடிப்பு தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.