இந்திய விமானப் படையின் ருத்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி!

இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ருத்ரா எம்-2 ஏவுகணை, அதன் உந்துவிசை அமைப்பு, கட்டுப்பாடு மற்றும் வழிநடத்தும் அல்காரிதம் போன்றவை நேர்த்தியாக செயல்பட்டு, சோதனை நோக்கத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணையாகும். இது பல வகையான எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. பல்வேறு டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செயல்திறன் குறித்து பல்வேறு அதிநவீன முறைகளில் பரிசோதனை செய்யப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.

ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ-க்கும், இந்திய விமான்ப் படைக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். ”ருத்ரா எம்-2 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை, பாதுகாப்புத்துறைக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கப் போகிறது” என்று அவர் கூறினார்.