சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருக்கிறார்: டி.டி.வி. தினகரன்!

பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்க அலைக்கழித்த காரணத்தினால், சிகிச்சைக்காக வந்த மூதாட்டியை அவரின் மகளே தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, என எழும் தொடர் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அலைக்கழிக்கப்படும் அவலச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது.

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருப்பதால் இனியும் அரசு மருத்துவமனைகளை நம்பி பயனில்லை என்ற சூழலுக்கு அடித்தட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.