இன்று திருச்சி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் நடைபெற்றது. அதற்கு முன்தாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வந்து, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். கடந்த ஏப்ரல் 12-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வைரவன்பட்டி பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.