பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்: சீமான்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், இழந்த பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக உள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் நேற்றிரவு திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டு பரவியுள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் சூழலியல் சீர்கேடுகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

எனவே, காட்டுத்தீ முழுமையாக அணைக்கபட்டதை தமிழக அரசு உறுதி செய்வதுடன் பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இக்காட்டுத்தீக்கான காரணிகளைக் கண்டறிய வேண்டும். குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகளாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தத் தீ விபத்தில் இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் காலம் கடத்தாமல் அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.