வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சத்திய பிரதா சாஹுவுக்கு ஆர்எஸ் பாரதி கடிதம்!

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அக்கட்சியின் சார்பில் கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பி இருக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அதனையடுத்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் முகவர்களுக்கு பயிற்சியளித்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

தேர்தல் விதிகள் படி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கையேட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், மின்னணு இயந்திர இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை பின்பற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சரியான நடைமுறை அல்ல. குழப்பம்: இந்தத் தகவல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சரியான நடைமுறையை தெரிவிப்பதுடன், அனைத்து வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்த சரியான நடைமுறையை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.