நான் முதல் முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்: சஞ்சனா சிங்!

நான் முதல் முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக ‘வேட்டைக்காரி’ படத்தில் நடித்திருக்கிறேன் என்று நாயகி சஞ்சனா சிங் கூறியுள்ளார்.

கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்சென்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

நாயகி சஞ்சனா சிங் பேசுகையில், ‘நான் 15 வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கிறேன், ஆனால் எனக்கு சரியாக தமிழ் பேச வராது, இருந்தாலும் நான் அனைத்து இடங்களிலும் தமிழில் தான் பேசுவேன், தமிழ் என் உயிர். 2009 ஆம் ஆண்டு நான் நடித்த முதல் தமிழ்ப் படமான ‘ரேணிகுன்டா’ வெளியானது, இப்போது வரை அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், இனி என்னை ‘வேட்டைக்காரி’ சஞ்சனா என்று மக்கள் அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். காரணம், நான் முதல் முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன்’ என்றார்.