பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்: எல்.முருகன்!

பிரகாஷ்ராஜ் ஒரு கன்னட நடிகர். தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நீலகிரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மனை தேசநலனுக்காகவும், பொது மக்கள் நலனுக்காகவும் வேண்டினேன். ஜனநாயக திருவிழாவான தேர்தலில் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 7 கட்ட தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற உள்ளார். இந்த நாடு வல்லரசு நாடு ஆக வேண்டும் எனில் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி: பிரதமர் அரசியலுக்காக தியானம் செய்வதாக காங்கிரஸ் கட்சியும், பிரகாஷ் ராஜும் கூறுகின்றனரே?

பதில்: பிரகாஷ் ராஜிடமும், காங்கிரஸ் தலைவரிடமும் என்ன எதிர்பார்க்க முடியும். உலக நன்மைக்காக தான் பிரதமர் தியானம் செய்து வருகிறார். சென்ற தேர்தலின்போது இமயமலையில் மோடி அவர்கள் தியானம் செய்தார். இன்றைக்கு குமரியில் முனிவர் போல தியானம் செய்து உள்ளார்.

கேள்வி: இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

பதில்: இந்தியா கூட்டணி தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அவர்கள் நூறு சீட்டு தாண்டுவதே கஷ்டம். அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஜெயிலுக்கு சென்றுவிடுவார். மம்தா, ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால் இந்தி கூட்டணி, இல்லாத கூட்டணியாகிவிட்டது. இந்தி கூட்டணியால் நாட்டுக்கு எந்த பிரயோஜனும் இல்லை.

கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

பதில்: தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நாங்கள் பெற உள்ளோம். இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து மோடிஜிக்கு சமர்பிக்க உள்ளோம்.

கேள்வி: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் மீண்டும் தருவாரா? கருப்பு பணத்தை அழிப்பாரா?

பதில்: மீடியாக்களாலும், எதிர்க்கட்சிகளாலும் கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதை, பிரதமர் எந்த இடத்திலும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று சொன்னது கிடையாது. இந்தி தெரியாதவர்கள், முறையாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் சிறையில் உள்ளதற்கு காரணம் பிரதமர்தான், பிரதமரின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இருக்காது, ஊழல்வாதிகள் சிறையில் இருப்பார்கள். கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமே கிடையாது.

கேள்வி:- கலைஞர் உயிரோடு இருந்தால் யாரும் வாலாட்ட முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறி உள்ளாரே?

பதில்: கருணாநிதி அவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அனைவருக்கும் தெரியும். பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவர் ஒரு கர்நாடக நடிகர், அவர் அங்கு உள்ள கருத்துக்களை சொல்லலாம், அவரது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.