பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே: கி.வீரமணி

பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என திராவிடர் கழகத் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், பாஜக 293 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளைக் கைப்பற்றியது. கடந்த தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை ஆட்சியமைக்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்தில் உதவியை நாடியுள்ளது. இரு கட்சிகள் ஆதரவுடன் பாஜக கூட்டணி அரசை அமைக்கவுள்ளது. வரும் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

இந்த சூழலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரதமர் மோடி வந்தும் பாஜகவுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது தோல்விக்குச் சமமான வெற்றியே. இந்தியா கூட்டணியின் முடிவு முதிர்ச்சியானது, வரவேற்கத்தக்கது. கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மோடியும் அவரது கட்சியினரும் உறுதிபட உச்சரித்த 400 எண்ணிக்கை வெற்றி என்ற பேராசை, பொய்யாய், பழங்கதையாய், கனவாகி, கானல் நீர் வேட்டையாகி விட்டது என்று விமர்சித்த கி.வீரமணி, தேர்தல் பரப்புரை என்ற பெயரால் பிரதமர் மோடி தரம் தாழ்ந்து இந்தியா கூட்டணியினர் மீது வைத்த அபாண்ட குற்றச்சாற்றுகள் எதுவும் எடுபடவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டினைக் குறி வைத்து 9 முறை தொடர்ந்து வந்தார் பிரதமர், போகாத பெரிய கோவில்களே கிடையாது.. கடைசியாக தியானம் என்ற வித்தையும் மறைமுகத் தேர்தல் பிரச்சாரம்போல நடைபெற்றது என்றதோடு, ஆனாலும் 400 இடங்கள் கிடைக்கவில்லை. மேலும், அறுதிப் பெரும்பான்மைகூட கிட்டாமல், ஆட்சி அமைக்க இரண்டு, மூன்று கட்சிகளைத் தேடி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவரித்தார்.

இந்தியா கூட்டணிக்கோ, தோல்வி போன்ற தோற்றமிருப்பினும்கூட, வெற்றி முகம் கொண்ட வெற்றி வாய்ப்பு நழுவி, வெற்றிகரமான தோல்வி என்றே உலகம் அறியவேண்டிய நிலை என்ற கி.வீரமணி, பதவியேற்கவிருக்கும் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் தொடருமா? என்ற கேள்விக்குறியும் உள்ளது .

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர்?, நிலையான ஆட்சியைத் தர முடியுமா? என முன்பு பாஜக கேட்ட கேள்வி, இப்போது பூமராங் ஆகி, பாஜகவை பார்த்து, நாடே, உலகமே கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.