இந்தியர்கள் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது: கங்கனா ரணாவத்!

இந்தியாவில் அதிக நேரம் வேலை செய்வதை இயல்பாக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் சோம்பேறியாக இருக்கக்கூடாது என்றும் நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளாராக ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி ஆகியுள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் பேசும் காணொளியைப் பகிர்ந்த கங்கனா, அதன் கீழ் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் பிரதமர் மோடி, “என்னுடைய ஒவ்வொரு கணமும் இந்தியாவுக்கானதே. 2047-க்குள் இந்தியா முன்னேறிய நாடாக மாற நான் 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

அந்தக் காணொளியின் கீழ், “நாம் அதிகமாக வேலை செய்யும் கலாச்சாரத்தை இயல்பாக்க வேண்டும். வார இறுதிக்காகக் காத்திருப்பதையும், திங்கள்கிழமை வேலை தொடர்பான மீம்களைப் பகிர்வதையும் நிறுத்த வேண்டும். அவையனைத்தும், மேற்குலகத்தின் மூளைச்சலவையே. நாம் இன்னும் முன்னேறிய நாடாக மாறவில்லை. எனவே, நாம் சலிப்படைந்தவராகவோ, சோம்பேறியாகவோ இருக்கக்கூடாது” என்று இன்ஸ்டாகிராம் பதிவில் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.