மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. 232 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், திமுக உள்ளடங்கிய இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக மக்களவையில் அமரவுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த சூழலில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் இன்று புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், “விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரவில்லை. குளறுபடிகள் நடந்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் முடிவை தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

13 வது சுற்றில் இருந்து நேரடியாக 19 வது சுற்றை எண்ண ஆரம்பித்ததாக தெரிவித்த விஜய பிரபாகரன், “மதிய உணவுக்காக எல்லோரும் வெளியே செல்லும்போது 5 சுற்று வாக்குகளை எண்ணி முடித்திருந்தனர். தபால் வாக்குகளை அனைவரும் சென்றபிறகு தனியாக திறந்து எண்ணினார்கள் என்பது உள்பட பல காரணங்களை முன் வைத்துள்ளோம். இதுதொடர்பாக நியாயம் கிடைக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “தோல்வியைக் கண்டு பயப்படும் கட்சி தேமுதிக இல்லை. விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்கட்டும். மார்தட்டி அதனை மனப்பூர்வமாக வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுதான் இது” என்றும் விஜய பிரபாகரன் கூறினார்.