நடிகர் பிரதீப் கே.விஜயன் இன்று சென்னையில் காலமானார்!

‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த உறுதுணை நடிகர் பிரதீப் கே.விஜயன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 45 என கூறப்படுகிறது.

தமிழில் வெளியான ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’,‘லிஃப்ட்’, ‘இரும்புத் திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை பாலவாகத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களாக பிரதீப் வீட்டை விட்டு வெளியே வரவலில்லை எனவும், அவரது நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியாக காரணம் தெரியவில்லை. பிரதீப்பின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.