எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது: அன்புமணி!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்ச முத்து என்கிற பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார் இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு நேற்றுடன் (வியாழக்கிழமை) ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் ஹோட்டலை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஆர்எம் குழுமம், தற்போது ஹோட்டலில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளதகாவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர். மேலும் உடனடியாக ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும் இன்று வரை தான் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாரிவேந்தருக்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருச்சியில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். திருச்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான உணவு விடுதியை எஸ்.ஆர்.எம் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறது. தமிழக அரசின் குத்தகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதி நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அதை தமிழக அரசு மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வரை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் போட்டியிட்டது தான் அரசின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பழிவாங்கும் செயல்கள் கூடாது. ஒரு புறம் சுற்றுலா வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சுற்றுலா வளர்ச்சிக்காக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட நினைப்பது சரியான செயலல்ல. அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும்; வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும். எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடவோ, இடிக்கவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. குத்தகை விதிகளுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தொடர்ந்து நடத்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.