எனக்கு ட்விட்டர்ல கணக்கே கிடையாது: ஜான்வி கபூர்!

தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு உள்ளதாகவும், ட்விட்டரில் கணக்கு எதுவும் இல்லை என்றும் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். சமீபத்தில் இவரது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் ஜானகி கபூரின் கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி. ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ராம்சரணுடன் ஆர்சி16 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல அடுத்ததாக தமிழிலும் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்டிஆர்48 படம் வரலாற்று பின்னணியில் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியது. எஸ்டிஆர்48 படத்தில் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் என இரண்டு பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாகவும் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஜான்வி கபூர். இவரை இன்ஸ்டாகிராமில் 24 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவரது பதிவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு உள்ளதாகவும் ட்விட்டரில் கணக்கு எதுவும் இல்லை என்றும் ஜான்வி கபூரின் டீம் விளக்கமளித்துள்ளது.

ஜான்வி கபூர் பெயரில் ஏராளமான பேக் ஐடிகள் கிரியேட் செய்யப்பட்டு அதன் மூலம் தவறான செய்திகள் ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டு வருவதாகவும், இதில் உண்மை தன்மை இல்லை என்றும் ஜான்வி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர்கள் இந்த போலி அக்கவுண்டுகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.