யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்?: வானதி சீனிவாசன்!

தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவைத்தும்கூட, கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால், மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 130க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக அரசை கடுமையாக சாடியிருக்கிறார். வானதி சீனிவாசன் கூறியதாவது:-

மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில், யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னைக்கு காலையில், வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்கிங் போகிறவர்களையும் வரவிடாமல் பார்க்கை இழுத்து மூடி விட்டார்கள். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறோம். சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு சேர்ந்து யோகா செய்வதில், என்னவாகி விடப்போகிறது?

தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கெல்லாம் கவனம் கொடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை.. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும், நடைபயிற்சி செய்யும் பார்க்கையும் பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை. உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி நடப்பது 2வது சம்பவமாக உள்ளதென்றால், மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான். ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.