கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார்: எச்.ராஜா

“கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார். பாஜகவின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர். விமர்சனத்தை தாங்கிக் கொள்ள முடியாதவராக உள்ளார் முதல்வர். விஷச் சாராய உயிரிழப்பை தடுக்க வழியில்லாத திமுக அரசு, பாஜக ஆர்ப்பாட்டத்தை தடுக்கிறது. தமிழக மக்கள் திமுகவுக்கு 40-க்கு 40-வது எம்பிக்களை வழங்கியது மக்களை கொல்வதற்குத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாராய சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் கருணாநிதி.

போலீஸாரை வைத்து பாஜகவினரை தடுக்கின்றனர். திமுகவும், திமுக அரசும் வேரோடு வேராக அழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு இருக்கும் வரை மக்களுக்கு ஆபத்துதான். தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் இருப்பதாக கனிமொழி கூறினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் 50-க்கும் மேற்பட்ட இளம் விதவைகளை கூட்டியுள்ளார். தமிழக பாசிச திமுக அரசை கண்டிக்கிறோம். தமிழக மக்கள் 1977 ஆகஸ்ட் 30 வரை சந்தோஷமாக இருந்தனர். எப்போது கருணாநிதி அரசு ஆட்சிக்கு வந்ததோ, அன்றில் இருந்து தமிழகத்தில் பெண்களின் தாலி அறுப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.