ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான்: கமல்ஹாசன்!

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கமல், ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான். நாம் இல்லாமல் அரசியல்வாதிகள் ஊழலை தனியாக நடத்திவிட முடியாது என்று கூறினார்

1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல், தந்தை-மகன் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம், கிட்டத்தட்ட 6 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்போது உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தில் டிரைலர் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஷங்கர், கமல்ஹாசன் இப்படத்திற்காக போட்ட கடின உழைப்பு கொஞ்ச நஞ்சம் இல்லை. படப்பிடிப்புக்கு முதல் ஆளாக அவர் தான் வருவார். அவருக்கு நான்கு மணிநேரம் மேக்கப் போடப்படும், சாப்பாடு சாப்பிட முடியாது வெறும் ஜூஸ்தான் குடிப்பார். அதே போல படப்பிடிப்பு முடிந்து அனைவரும் போன பிறகு மேக்கப்பை கலைக்க 3 மணி நேரம் ஆகும். அதன் பிறகு கடைசியாக செல்வார். அதே போல, படத்தில் ஒரு காட்சிக்காக அந்தரத்தில் தொங்கியபடி 4 நாட்கள் நடித்தார் என்றார்.

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒரு செய்தியாளர், ஒருவர், 28 வருடத்திற்கு முன் இந்தியன் படம் வந்தது. ஆனால், அப்போதும் அதே ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு காரணமான அரசியல்வாதியா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கமல், ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான். நாம் இல்லாமல் அரசியல்வாதிகள் ஊழலை தனியாக நடத்திவிட முடியாது. இதையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். அதற்காக நான் தனியாக பாராட்டிவிட்டேன், இனி நீங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்ட வேண்டும் என்றார்.

இதையடுத்து மற்றொரு செய்தியாளர், இந்தியன் 2 ஜூலை 12ந் தேதி வெளியாகிறது. இதன் நான்காம் பாகம், ஐந்தாம் பாகங்கள் வெளியாகி மம்முட்டியின் சாதனையை முறியடிக்குமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கமல், இந்த கேள்வியை நீங்கள் கேட்கும்போதே எனக்கு பதறுகிறது, தயவு செய்து அந்த கேள்வியை இப்போது கேட்க வேண்டாம். இந்தியன் முதல் பாகம் எடுக்கும் போது, நான் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று ஷங்கரிடம் கூறினேன். அப்போது அவர் பதறினார். இப்போது நான் பதறுகிறேன். முதலில் இந்த படத்தை பாருங்க, இதற்கு அடுத்து வரும் படத்தையும் வெற்றிப்படமாக்குங்கள். அதன்பிறகு எங்களுக்கு தெம்பு இருந்தால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அது எல்லாம் நடக்கலாம் என்று மாஸாக பதில் அளித்தார்.

இதையடுத்து இந்தியன் 2வில் சுகன்யா வருவாங்களா? என்ற கேள்வி பதில் அளித்த ஷங்கர். அந்த கதாபாத்திரம் இந்தியன் 2வில் தேவைப்படவில்லை. மேலும், படத்தின் கதை குறித்து பல யூடியூப் சேனல்களில் பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது. அதை எல்லாம் எனக்கு பார்க்க இப்போது நேரம் இல்லை. இந்தியன் 2 படத்தின் கதை என்ன என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று இயக்குநர் ஷங்கர் பதில் அளித்தார்.