அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கிட்டத்தட்ட விசாரணை முடிந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்று கூறிய அமலாக்கத் துறை, வழக்கு விசாரணையில் உதவிட தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது, 71 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது. எனவே அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.