தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் பேசினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாமக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும். பாலாற்றில் அணை கட்டுவோம் என்ற திமுக, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முன்வரவில்லை. கர்நாடகாவில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் அணை கட்டுவது தொடர்பாக திமுக பேசவில்லை.

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சி ஜெயிக்கும் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மாற்றிகாட்டியது.
மத்திய அரசின் திட்டங்களை பெற்று தர பாமகவை ஆதரிக்கவேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் முன் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு போதை பொருள் விற்கும் சந்தையாக மாறியுள்ளது. இங்கு கூலிப்படை ஆட்சிதான் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பிகாரை போல மாறிவிடும் வாய்ப்புள்ளது. வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை பறிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு டிடிவி. தினகரன் பேசினார்.